சென்னை: ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு மரபணு உள்ளதாகவும், சாதியப் பற்று இருக்கலாம் ஆனால் சாதிய வெறிதான் இருக்கக்கூடாது என அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் அகில இந்திய நாடார் பேரவை நடத்திய நாடார் சங்கமம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு பேசுகையில், எப்படி ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு மரபணு இருக்கிறதோ, அதேபோன்று ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு மரபணு உள்ளது. அந்த மரபணுவில் அந்த சமுதாயத்தில் அடையாளங்கள் ஊறி இருக்கிறது. சாதியப்பற்று இருப்பது தவறில்லை. சாதிய வெறிதான் இருக்கக்கூடாது.
இன்னொரு சாதியை காலி பண்ண வேண்டும் என்ற எண்ணம் இருக்கக் கூடாது. தனது சமுதாயம் வளர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. உலகத்தில் எந்த நாட்டிலும் இது கிடையாது.
நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் நின்றால், அவர்களுக்கு அச்சமூக மக்கள் கண்டிப்பாக ஆதரவு தெரிவிக்க வேண்டு என்று சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் பாண்டியராஜன் பேசியுள்ளார்.