நூறு நாள் வேலை முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம் மற்றும் கழிப்பிடங்கள் கட்டும் திட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகார் குறித்த விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயகிருஷ்ணா தாக்கல் செய்த மனுவில், கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூர் முன்னாள் பஞ்சாயத்து செயலாளர் மகாதேவா என்பவர் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பெரும் தொகையை முறைகேடு செய்துள்ளார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு மத்திய அரசு ரூ.9 ஆயிரமும், மாநில அரசு ரூ.3 ஆயிரமும் வழங்கும்.
ஆனால் இந்தத் தொகைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. இறந்தவர்களின் பெயரில் இந்தப் பணத்தை எடுத்து பஞ்சாயத்து செயலாளர் மோசடி செய்துள்ளார்.
இதுதொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை இயக்குநரிடம் கொடுத்த புகாரை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, புகார் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய லஞ்சஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார்.