சென்னை: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இடமில்லை என்று தமிழகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழக முதல்வரை சந்திக்க கர்நாடக அமைச்சர் நேரம் கேட்டு கடிதம் எழுதியிருந்தார்.
இது தொடர்பாக தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய நீர்வளத்துறையின் அனுமதியின்றி அப்பகுதியில் ஆய்வு நடத்துவது சட்டவிரோதமாகும். தமிழக அரசின் ஒப்புதல் இன்றி மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
மேக்கேதாட்டு அணை குறித்து விரிவான அறிக்கை தயாரிப்பதை உடனடியாகக் கைவிட வேண்டும். காவிரி விவகாரத்தில் பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடகம் மதிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு கர்நாடக அமைச்சர் எழுதியிருந்த கடிதத்துக்கு சி.வி. சண்முகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.