சென்னை: பாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி என்று ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான்,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு நடந்த தேர்தல் முடிவுகள் செவ்வாய் காலை 8 மணியில் இருந்து வெளிவரத் துவங்கியுள்ளன.
இதில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரியா சமிதி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அரிதிப் பெரும்பான்மையைப் பிடிக்க நெருக்கடி நிலை நிலவுகிறது.
இந்நிலையில் பாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி என்று ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநில தேர்தல்களில் சிறப்பான செயல்பாடுகளுக்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கும்,ராகுல் காந்தி அவர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாசிச பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வகையிலும், மகா கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையிலும் தேர்தல் முடிவுகள் அமைநதுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.