மக்களின் உணர்வுகளை மதித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்துள்ளது என்றார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது: கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழு பார்வையிட்டு தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இறுதி அறிக்கை சமர்ப்பித்த பின், மத்திய அரசு நல்ல நிவாரண தொகையை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அண்டை மாநிலமாக கேரளத்துக்கு நிவாரணமாக ரூ.3,048 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சேதமடைந்துள்ளன. அதில் 4 டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். கோரிக்கைக்கு ஏற்ப தேவையான நிதியை மத்திய அரசு தரும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதிமுக அரசு மக்களுடைய எண்ணங்களுக்கு மதிப்பளித்துதான், 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்துக்கு தீர்வு கண்டுள்ளது. மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில்தான் அந்த ஆலை மூடப்பட்டுள்ளது என்றார் அவர்.
பேட்டியின்போது, தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.