பெண்களுக்கு வீடுகளிலோ, பணிபுரியும் இடங்களிலோ பாலியல் தொல்லை ஏற்பட்டால் அதுகுறித்து கட்டணமில்லாத 181 தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். 181எண் சேவையை தமிழக முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல் போன்ற கொடுமைகளால் வீடுகளிலோ, வெளியிடங்களிலோ, பணிபுரியும் இடங்களிலோ பாதிக்கப்படும் பெண்கள் அவசர உதவி பெறலாம்.
இதற்கென 24 மணிநேரமும் செயல்படும் பெண்களுக்கான 181 கட்டணமில்லாத தொலைபேசி எண் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால், அவசர காலங்களில் பெண்கள் கட்டணமில்லாத தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
காவல்துறை, மருத்துவமனை, ஆம்புலன்ஸ், சட்ட உதவி போன்ற இதர அத்தியாவசிய துறைகளின் உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத் திட்டங்கள் குறித்த விவரங்களையும், குடும்ப வன்முறை, இதர வகை கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் பற்றியும் கேட்டு அறியலாம். இதற்கென அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கட்டணமில்லாத தொலைபேசி 181 சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மூன்றாம் பாலினத்தவர்: மூன்றாம் பாலினத்தவரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கான நல வாரியம் மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுயதொழில் தொடங்க மானியத் தொகையாக ரூ. 20 ஆயிரம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், அதனை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்தத் திட்டத்தையும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வி.சரோஜா, க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.