தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியிடாததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையத்தின் செயலர் ஆகியோர் டிசம்பர் 18-ஆம் தேதி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும், அதுதொடர்பான அறிவிப்பாணையை 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் வெளியிடவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறிய மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெஃரோஸ் கான் மற்றும் மாநில தேர்தல் ஆணையச் செயலளர் டி.எஸ்.ராஜசேகர் ஆகியோர் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜரானார்.
மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் நரசிம்மா, தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தால்தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முதல்நாள் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதால், அந்த சட்டத்தை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
மேலும் வேண்டுமென்றே உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பதாகக் கூறும் குற்றச்சாட்டு தவறானது. எனவே இந்த சட்டத்தை அமல்படுத்தி, அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றிய பிறகு தேர்தல் நடத்தப்படும் என வாதிட்டார்.
அப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை சார்பில் மூத்த வழக்குரைஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ் ஆஜராகி வாதிட்டார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் செயலர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.