பாம்பன் ரயில் தூக்குப் பாலம் பழுதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு 8 நாள்களாகியும் சீரமைக்கப்படாததால் ராமேசுவரத்துக்கு வரும் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
கடந்த 4 ஆம் தேதி பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை திறந்து மூடியபோது திடீரென பழுது ஏற்பட்டது. அதை உடனடியாக சரி செய்ய முடியவில்லை.
இதனால் ராமேசுவரத்துக்கு வரும் ரயில்கள் அனைத்தும் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. பாலத்தில் பழுதை நீக்கி சீரமைக்கும் பணியில் ரயில்வே பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து ராமேசுவரம் வரும் பக்தர்கள், ராமநாதபுரம், மண்டபம் ரயில் நிலையங்களில் இறக்கி விடப்படுகின்றனர். அங்கிருந்து பேருந்தில் ராமேசுவரத்துக்கு சென்று மீண்டும் அதே ரயில்நிலையங்களுக்கு வந்து ரயிலில் புறப்படுகின்றனர்.
8 நாள்களைக் கடந்தும் சீரமைப்பு பணி முடியவில்லை. இந்நிலையில், ராமேசுவரத்துக்கு வரும் பயணிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். ரயில்வே நிர்வாகம் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை விரைந்து சீரமைத்து மீண்டும் ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.