தமிழக அரசின் சார்பில் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நடைபெறவுள்ள யானைகள் புத்துணர்வு முகாமை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி வனப்பத்ரகாளியம்மன் கோயில் அருகே பவானி ஆற்றங்கரையோரத்தில் யானைகள் புத்துணர்வு முகாம் வெள்ளிக்கிழமை துவங்கி 48 நாள்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த முகாமை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெறும்போது, அப்பகுதிக்கு காட்டு யானைகள் வருகை அதிகரிக்கும். இவை அப்பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுவதும், மனிதர்களைத் தாக்குவதும் நிகழ வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
எனவே, தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையோரத்தில் நடைபெறவுள்ள யானைகள் நலவாழ்வு முகாமை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றனர். இதற்கு தாசம்பாளையம் தேக்கம்பட்டி, தாசனூர், நெல்லித்துறை, பாளையூர், மங்கலகரை, தொட்டதாசனூர் உள்ளிட்ட 23 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கோரிக்கையை வலியுறுத்தி 23 கிராம மக்கள் ஒன்றிணைந்து தேக்கம்பட்டி பஜார் பகுதியில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மேலும் முகாம் நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல பகுதிகளில் பதாகைககள் வைத்துள்ளனர். இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக போராட்டக் குழுவினருடன் சார் ஆட்சியர் கார்மேகம், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் புனிதா, டிஎஸ்பி மணி, மேட்டுப்பாளையம் வனச் சரகர் செல்வராஜ், முகாம் பொது மேற்பார்வையாளர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாத விவசாயிகள் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.