சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறும் என்பதால் வட தமிழகக் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, நேற்று தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்கு 1150 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இன்று இரவுக்குள் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை இது புயலாக வலுப்பெறும் வாய்ப்பும் உள்ளது.
இதன் காரணமாக 15, 16ம் தேதிகளில் வட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும். வட தமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும்.
டிசம்பர் மாதம் 15, 16ம் தேதிகளில் தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பவர்கள் கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.