சென்னை: வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகவிருக்கும் புயல் சின்னம் 17ம் தேதி பிற்பகலில் ஓங்கோல் - காக்கிநாடா இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக சென்னைக்கு தென் கிழக்கே 930 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்தில் இருந்து 1090 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இந்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று ஆந்திராவை நோக்கி நகர்ந்து ஓங்கோலுக்கும் - காக்கிநாடாவுக்கும் இடையே 17ம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 15, 16ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மழையும், ஓரிரு இடங்கனில் கன மழையும் பெய்யக் கூடும்.
வங்கக் கடலின் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பவர்கள் கரை திரும்பவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.