சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று தீவிரப் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது.
முதலில் வட தமிழகம் - ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட புயல், ஆந்திரா நோக்கி நகர ஆரம்பித்ததால், தமிழகத்துக்கு புயல் வாய்ப்பு தவிர்க்கப்பட்டது. அதனால், தமிழகத்துக்கான மழை வாய்ப்பும் குறைந்துவிட்டது.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாள் மழை வாய்ப்பு குறைந்து தற்போது வட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே மழை பெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று புயல் சின்னமாக மாறும் தாழ்வு மண்டலம் காரணமாக, தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழகம் பகுதிகளில் கன மழை பெய்யும் என்றும், இது மேலும் தீவிரமடைந்து, புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புயல் எங்கு கரையைக் கடக்கும் என்பது இதுவரை கணிக்கப்படவில்லை. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் குறைந்தது ஒரு நாள் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புயல் கரையைக் கடக்கும் போது தனுஷ்கோடி முதல் புலிகாட் வரை கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும், ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் அனைவரும் கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.