தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுவடைந்து, வெள்ளிக்கிழமை முற்பகலில் புயலாக மாறவுள்ளது. இது தீவிரப் புயலாகி மாமல்லபுரம் அருகே சனிக்கிழமை கரையை கடக்கக் கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் வியாழக்கிழமை கூறியது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வியாழக்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இது தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 1,120 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. தொடர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து, வெள்ளிக்கிழமை முற்பகலில் புயலாக மாறவுள்ளது. இது வடமேற்கு நோக்கி நகர்ந்து, தெற்கு ஆந்திரம் மற்றும் அதையொட்டிய வட தமிழகம் கடற்கரை நோக்கி கடக்கக் கூடும். இதன்காரணமாக, வடதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (டிச.15, 16) ஆகிய நாள்களில் பலத்த மழை பெய்யக்கூடும். வடதமிழக கடலோரம், புதுச்சேரியில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழையும் பெய்யும் என்றார் அவர்.
பலத்த காற்றுவீசும்: வடதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் மேலும் வலுவடைந்து, புயலாக மாறவுள்ளதால், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (டிச.15, 16) ஆகிய நாள்களில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னைக்கு அருகே புயல்: தென் கிழக்கு வங்கக்கடலில் மையம்கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் மேலும் வலுவடைந்து வெள்ளிக்கிழமை புயலாக மாறவுள்ளது. மேலும், இது சென்னைக்கு அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: இந்த புயல் தெற்கு ஆந்திரம் மற்றும் அதையொட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்கும். குறிப்பாக, இந்த புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. வெள்ளிக்கிழமை முற்பகல் புயலாகவும், சனிக்கிழமை இரவு தீவிர புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது என்றனர்.