புதிய தலைமைச் செயலகம் தொடர்பான வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றும் அரசாணை ரத்து

புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டியதில் நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
புதிய தலைமைச் செயலகம் தொடர்பான வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றும் அரசாணை ரத்து

புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டியதில் நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் கடந்த 2011-ஆம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.     ரகுபதி ஆணையம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரை முருகன் ஆகியோருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக் கோரியும், ரகுபதி ஆணையத்துக்கு தடை விதிக்க கோரியும் 3 பேரின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி, ரகுபதி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்து, ஆணையத்தின் ஆவணங்களை பரிசீலித்து தேவைப்பட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளர் துரைமுருகன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சனும், அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜனும் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தில் ரகுபதி ஆணையத்தின் சார்பில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களை முழுமையாக தமிழக அரசு பரிசீலிக்காமல் நேரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அவசரகதியில் உத்தரவிட்டுள்ளது சட்ட விரோதமானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பி அந்த ஆவணங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டியதில் ரூ.629 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. 

விசாரணை ஆணையம் என்பது உண்மையைக் கண்டறிந்து அரசுக்குப் பரிந்துரை அல்லது அறிவுறுத்தும் அமைப்பே தவிர நீதித்துறையின் அங்கம் இல்லை. ஆணையத்தின் பரிந்துரைகளை நீதிமன்றத்தின் உத்தரவுகளாகக் கருத முடியாது. 

நீதிபதி ரகுபதி ஆணையம் அரசுக்கு எந்தவொரு அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. மேலும் இந்த ஆணையத்தை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு இதுவரை மேல்முறையீடும் செய்யவில்லை. நீதிபதி ரகுபதியின் ராஜிநாமாவை அரசு எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த சூழலில் நீதிபதி ரகுபதி ஆணையம் சேகரித்த ஆவணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட முடியாது. இந்த விவகாரத்தில் ஆணையம் அமைக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறவில்லை. 

எனவே புதிய தலைமைச் செயலக விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மற்றும் கடிதம் ரத்து செய்யப்படுவதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com