ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்கியது தொடர்பான அந்நியச் செலாவணி வழக்கில் காணொலிக் காட்சி மூலம் சசிகலாவுக்கு எதிராக மறு குற்றச்சாட்டுப் பதிவு செய்வதற்கான விசாரணையை டிசம்பர் 20-ஆம் தேதிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கப் பிரிவினர் எழும்பூர் நீதிமன்றத்தில் அந்நிய செலாவணி மோசடி வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக, காணொலிக் காட்சி வழியாக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.
குற்றச்சாட்டு பதிவுக்குப் பின்னர், அந்த ஆவணத்தில் கையெழுத்திடுவது உள்ளிட்ட சில நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. சசிகலாவுக்கு எதிராக மறு குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக டிசம்பர் 13-ஆம் தேதி சசிகலா நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, காணொலிக் காட்சி மூலம் சசிகலாவுக்கு எதிராக மறு குற்றச்சாட்டைப் பதிவு செய்யவும், விசாரணையை 4 மாத காலத்துக்குள் முடிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், உயர்நீதிமன்ற உத்தரவு நகலை தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து காணொலிக் காட்சி மூலம் சசிகலாவுக்கு எதிராக மறு குற்றச்சாட்டுப்பதிவு செய்வதற்காக வழக்கு விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.