சென்னை ஐஐடி உணவு விடுதியில் தனித்தனி வாயில்கள் அமைத்தது கண்டிக்கத்தக்கது என மத்திய இணைய அமைச்சர் பொன்.ராதாகருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள உணவு விடுதியில் மாணவர்களை பாகுப்படுத்தும் வகையில், சைவம், அசைவம் என பிரித்து தனித்தனி நுழைவு வாயில் வைக்கப்பட்டுள்ளதாக அம்பேத்கர் பெரியார் வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்தனர்.
கடும் எதிர்ப்பையடுத்து சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தனித்தனி நுழைவு வாயில் அகற்றப்பட்டது. இதனிடையே இவ்விவகாரம் தொடர்பாக விடுதி விவகாரங்கள் செயலாளர், மாணவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் இதுகுறித்து மாணவர்களின் மின்னஞ்சலுக்கு மன்னிப்புக் கடிதமும் அவர் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
சென்னை ஐஐடி உணவு விடுதியில் சைவம் மற்றும் அசைவம் சாப்பிடும் மாணவர்களுக்கென தனித்தனி வாயில்கள் மற்றும் கை கழுவுமிடம் அமைத்தது தவறான செயல். இது கண்டிக்கத்தக்கது. நிர்வாகம் தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் எந்த கட்சியோடும் பாஜகவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக கூறுவது வேடிக்கையானது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்ந்ததற்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.