8 வழிச் சாலைத் திட்டம் தொடர்பாக சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:
ஒட்டுமொத்த மக்களின் நலன் கருதியே பசுமை வழிச்சாலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவிலேயே 2-வது பசுமை வழிச்சாலை தமிழகத்தில் அமைய வாய்ப்பு கிடைத்துள்ளது. பசுமை வழிச்சாலை திட்டம் மூலம் யாரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது சாலை வசதி மிக முக்கியமாகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாடுகளில் தொழில்வளம் பெருகி 8 மற்றும் 10 வழிச் சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுபோன்ற சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட வேண்டும். இங்கும் தொழில்வளம் பெருக வேண்டும்.
சேலம்-சென்னை சாலை திட்டத்துக்கு 11 சதவீதம் பேர்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், 89 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. முன்பு இதுபோன்ற திட்டங்கள் ஏற்படுத்தப்பட்ட போது குறைந்த அளவு மட்டுமே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. ஆனால், தற்போது விவசாயிகளுக்கு தேவையான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.
50 ஆண்டுகாலமாக காவிரிப் பிரச்னை உள்ளது. காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும். அது தான் தமிழகத்தின் நிலைப்பாடு. 5 மாநில தேர்தலுக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தமில்லை. இங்கு தேர்தல் வரும்போது அதுகுறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.