அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை: இன்று திறந்து வைக்கிறார் சோனியாகாந்தி

அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஞாயிற்றுக்கிழமை (டிச.16) திறந்து வைக்க உள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை: இன்று திறந்து வைக்கிறார் சோனியாகாந்தி

அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஞாயிற்றுக்கிழமை (டிச.16) திறந்து வைக்க உள்ளார்.
மீஞ்சூரில் சிற்பி தீனதயாளன் தலைமையிலான குழுவினர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை வடித்துள்ளனர். இந்தச் சிலை அறிவாலய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. அதைப்போல, அண்ணாவின் முழு உருவ வெண்கலச் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
சோனியா வருகை: இந்தச் சிலை திறப்பு விழா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்காக தில்லியிலிருந்து சோனியாகாந்தி விமானம் மூலம் மாலை 4.30 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பிறகு, அறிவாலயம் வந்து கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார். இதில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
ராகுல் காந்தி:  இந்நிகழ்ச்சியில் அகில  இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தியும் பங்கேற்க உள்ளார். பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் கூட்டம் தில்லியில் நடைபெற்றபோது, அதில் பங்கேற்கச் சென்ற மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதையேற்று, ராகுல்காந்தியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வர உள்ளார்.
நினைவிடத்தில் அஞ்சலி: சிலை திறப்புக்குப் பிறகு மெரீனாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு சோனியா செல்கிறார். அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
பொதுக்கூட்டம்: அதன் பிறகு, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.  திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சோனியா உரையாற்ற உள்ளார். கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். பொதுச்செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். பொருளாளர் துரைமுருகன் வரவேற்று பேசுகிறார். சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன், நாராயணசாமி ஆகியோரும் உரையாற்றுகின்றனர். சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் நன்றி கூறுகிறார். பொதுக்கூட்ட மேடை அறிவாலய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸார் வரவேற்பு: சென்னை விமான நிலையம் தொடங்கி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடல் வரை சோனியாகாந்தி, ராகுல்காந்தியை  வரவேற்பதற்கு காங்கிரஸார் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
பலத்த பாதுகாப்பு: சோனியாகாந்தியின் வருகையையொட்டி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com