முன்னாள் முதல்வர், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.16) திறக்கப்படும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. புனரமைக்கப்பட்ட அண்ணாவின் சிலையும் அதே நாளில் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா திறந்து வைக்க உள்ளார். மேலும், மெரீனாவில் கருணாநிதி நினைவிடத்திலும் மரியாதை செலுத்துகிறார். இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் பங்கேற்கவுள்ளார்.
இந்தச் சிலை திறப்பு விழா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
அதன் பிறகு, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சோனியா உரையாற்ற உள்ளார். பொதுக்கூட்ட மேடை அறிவாலய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
சோனியா, ராகுல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.