தமிழக அரசால் சீல் வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஏ.கே.கோயல் இதனை அறிவித்தார். அதன்படி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அதன் இணையதளத்தில் சனிக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சட்டம், ஒழுங்கு பாதிக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எந்தவிதமான போராட்டங்களிலும் மக்கள் ஈடுபட வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தூத்துக்குடி மக்கள் ஜனநாயக முறைப்படி சட்ட விதிகளுக்கு உட்பட்டு கோரிக்கையை வெளிப்படுத்த வேண்டும். தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிட மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் நபர்கள் பற்றி 0461-2340650, 9514144100 ஆகிய எண்களில் தகவல் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் அறிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளி மாவட்ட போலீசாரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.