நிகழாண்டு (2018-19 கல்வியாண்டு) முதல் ஆன்-லைன் மூலமே பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
இதன் மூலம், பி.இ. கலந்தாய்வுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் பெற்றோருடன் சென்னைக்கு இனி வரவேண்டியது இல்லை என்பதும், அவரவர் பகுதிகளில் இருந்தபடியே பி.இ. சேர்க்கை பெற முடியும் என்பதும் உறுதியாகியிருக்கிறது.
குருஷேத்ரா என்ற தொழில்நுட்ப மேலாண்மை விழாவின் துவக்க நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் விழாவைத் தொடங்கி வைத்தனர். பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டு சிறந்த படைப்புகளுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
தொடக்க விழாவுக்குப் பின்னர் அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டி:
பொறியியல் மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு நிகழாண்டு முதல் ஆன்-லைனிலேயே நடத்தப்படும். இதற்கான பணிகள் வேகமான நடைபெற்று வருகின்றன. மேலும், வரும் கல்வியாண்டில் பொறியியல் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும்.