மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கோயிலுக்குள் இருக்கும் வீர வசந்தராயர் மண்டபம், 36 கடைகள் வரை சேதமடைந்துள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்ட பின்னர் அவர் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.
இதனையடுத்து, மீனாட்சியம்மன் கோயிலுக்குள் சனிக்கிழமை காலை முதல் வழக்கம் போல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியதாவது:
மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் சிலைகள் ஏதும் பாதிக்கப்படவில்லை. மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து குறித்து ஆய்வு நடத்த விரைவில் குழு அமைக்கப்படும். தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது என்றார்.