சேலம் உருக்காலையின் உத்திசார் பங்குவிலக்கல் நடவடிக்கைக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய உருக்குத் துறை இணையமைச்சர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்தார்.
இது தொடர்பாக மக்களவை அதிமுக உறுப்பினர்கள் வி.சத்யபாமா, பி.ஆர். செந்தில்நாதன், ஆர்.கே.பாரதிமோகன் ஆகியோர், 'இந்திய உருக்கு ஆணையத்தின் (செயில்) கீழ் செயல்படும் உருக்கு நிறுவனங்களை மேம்படுத்தவும், பன்மைப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா? மேலும், இத்துறையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதா?' என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு மத்திய உருக்குத் துறை இணையமைச்சர் விஷ்ணு தியோ சாய் மக்களவையில் திங்கள்கிழமை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:
இந்திய உருக்கு ஆணையத்தின் (செயில்) துர்க்காபூர், அலாய் உருக்கு ஆலை, சேலம் உருக்கு ஆலை, விஷ்வேஸ்வரய்யா உருக்கு ஆலை (விஐஎஸ்பி) ஆகியவற்றில் உத்திசார் பங்குவிலக்கல் நடவடிக்கை மேற்கொள்வதற்காக மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்துள்ளது.
இந்த ஆலைகளின் வளர்ச்சி, வணிக வாய்ப்புகளின் அதிகபட்ச வளர்ச்சிக்கான நிதி, புதிய மேலாண்மை செயல்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பன்மைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் செயில் நிறுவனமும், ஆர்சிலர் மிட்டல் நிறுவனமும் இந்தியாவில் கூட்டாக இணைந்து ஒரு தானியங்கி உருக்கு உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக 2015, மே 22-ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்தியாவில் இரும்புத்தாது மற்றும் பதப்படுத்தப்பட்ட உருக்கு ஆகியவற்றுக்கான பற்றாக்குறை இல்லை என்று அமைச்சர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளார்.