மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி, அவர்களின் போராட்டத்தை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மின்வாரிய ஊழியர்களுக்கு 2015 -ஆம் ஆண்டு டிசம்பர் 1 -ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு ஒப்பந்தம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை புதிய 11 -ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பிப்ரவரி 12-ஆம் தேதிக்குள் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் அமைக்கப்படும் என்று மின்வாரிய நிர்வாகம் உறுதி அளித்ததால், வேலை நிறுத்த முடிவை ஊழியர்கள் ஒத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதிய ஊதிய ஒப்பந்தம் வழங்கப்படும் என்று உறுதியளித்து விட்டு திடீரென இடைக்கால நிவாரணம் அறிவித்துள்ளது ஊழியர்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 16 -ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக மின்வாரிய ஊழியர்கள் அறிவித்துள்ளனர். எனவே, தமிழக அரசு தொழிற்சங்கத் தலைவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, போராட்டத்தை தடுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.