திருக்குறளை பொருளுடன் ஒப்பித்த வெளிநாட்டு மாணவிகளை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பாராட்டினார்.
திருவள்ளூர் மற்றும் தாம்பரத்தில் உள்ள ஸ்ரீநிகேதன் பள்ளிக் குழுமங்களின் சார்பில், மாணவர் பண்பாட்டு புலம் பெயர் பயிற்சி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இதன் அடிப்படையில், நிகழாண்டில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 13 மாணவிகளும், 3 ஆசிரியர்களும் வருகை தந்துள்ளனர். இவர்கள் நிகேதன் கல்வி குழுமத்தின் விடுதிகளில் தங்கியிருந்து தமிழகத்தின் சிறப்புகளையும், பண்பாடு நிகழ்வுகளான கிராமிய ஆடல், பாடல்களையும் கண்டு களித்ததுடன், பயின்றும் வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வெளிநாட்டு மாணவிகள் சென்னையில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜனை அவரது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். அப்போது, அவர்கள், திருக்குறளை ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜனிடம் ஒப்பித்துக் காட்டினர். மேலும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக ரூ.10 ஆயிரமும் வழங்கினர். இதைத் தொடர்ந்து, டென்மார்க் நாட்டு மாணவிகள் தமிழ் மீது வைத்துள்ள பற்றை அவர் வெகுவாகப் பாராட்டி புத்தகங்களை பரிசாக வழங்கினார். முன்னதாக ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவ, மாணவிகளின் சார்பில் ஹார்வர்டு பல்கலைக்கு ரூ. 7.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்திப்பின்போது, ஸ்ரீநிகேதன் பள்ளிக் குழுமத்தின் தாளாளர் விஷ்ணுசரண், இயக்குநர் பரணிதரன், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.