லஞ்சம் வாங்கியபோது பிடிபட்ட பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஏ.கணபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் பணிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார்.
அவரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர். தற்போது அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பணியிடை நீக்கம்: இந்த நிலையில், துணைவேந்தர் கணபதி குறித்த வழக்கு விவரங்களும், அவரை பணியிடை நீக்கம் செய்வதற்கான கோப்புகளும் தமிழக அரசிடம் இருந்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த கோப்புகளை ஆய்வு செய்த ஆளுநர், துணைவேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முழு விசாரணை: பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கணபதி மீது கூறப்படும் பல்வேறு புகார்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது.