எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான இவ்வாண்டு 'நீட்' நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 6-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான சேர்க்கையானது 'நீட்' எனப்படும் தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடைபெறும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுகளை மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதில்,
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு மே மாதம் 6-ஆம் தேதி நடைபெறும். இதில் பங்கேற்க பிப்ரவரி 8-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு தேர்வுக் கட்டணமாக பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1,400 மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.750 செலுத்த வேண்டும். நீட் தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த மார்ச் 10-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இவ்வாறு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.