புதுதில்லி: தமிழகத்தில் 2015-16-ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட ரூ.5000 கோடி நிதி கேட்ட தமிழக அரசின் கோரிக்கையினை, மத்திய அரசு நிராகரித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த 2015-டிசம்பர் மற்றும் 2016 ஜனவரி மாதங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கடுமையான பொருட்சேதமும் உயிர்சேதமும் ஏற்பட்டது.
இந்த வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசு நிதியுதவி கோரியிருந்தது. அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் வீடுகளை இழந்தவர்களுக்கு, புதிதாக வீடு கட்ட என மத்திய அரசின் 'பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா' மற்றும் 'அனைவருக்கும் இல்லம்' ஆகிய திட்டங்களின் சுமார் ரூ.5000 கோடியினை நிதியாக கோரியிருந்தது.
இந்நிலையில் மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினரான மைத்ரேயன் இது தொடர்பாக வியாழனன்று கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சார்பில் எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:
தமிழக அரசுக்கு 'பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா' மற்றும் 'அனைவருக்கும் இல்லம்' ஆகிய திட்டங்களின் கீழ் 3,92,766 வீடுகளை கட்டுவதற்கு என ரூ.1,665 கோடி நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தகைய இயறக்கை சீற்றங்களின் பாதிப்புகளுக்கு வீடு கட்ட என இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு கேட்டிருந்த ரூ.5750 கோடி நிதியினை ஒதுக்க இயலாது.
இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.