மீன் பிடிக்கச் சென்ற போது, ராட்சத கடல் அலையில் சிக்கி விழுப்புரம் மாவட்ட மீனவர் உயிரிழந்தார். மேலும், 3 மீனவர்கள் காயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள அனுமந்தையைச் சேர்ந்த மதியழகனின் (55) விசைப் படகில், அதே கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் வல்லத்தான் (60), மதியழகன் (55), பரமசிவம் (45), குமார் (30) உள்பட 6 பேர் வியாழக்கிழமை அதிகாலை விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், பெருந்துறை குப்பம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் படகு சிக்கியது. அப்போது, படகில் இருந்த கயிறு அறுந்து, இரும்புக் குழாய் உடைந்து, படகின் ஒரு பகுதியில் இருந்தவர்கள் மீது விழுந்தது. மேலும், படகு நிலைதடுமாறி கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் வல்லத்தான், மதியழகன், பரமசிவம், குமார் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். உடன் சென்ற மற்ற மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்குத் திரும்பினர். பின்னர், புதுச்சேரி கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு 4 பேரையும் கொண்டு சென்றனர். இதில், வல்லத்தான் வழியிலேயே உயிரிழந்தார். மற்ற மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மரக்காணம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.