பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூரிலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரையிலும் பிப்ரவரி 13-இல் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டங்களில் பேச உள்ளனர்.
பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி மாவட்ட வாரியாக பிப்.13-ஆம் தேதி கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, திருவள்ளூரில் மு.க.ஸ்டாலினும், மதுரையில் வைகோவும் பேச உள்ளனர். திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் வேலூரிலும், துணைப் பொதுச் செயலாளர்கள் வி.பி.துரைசாமி பெரம்பலூரிலும், ஐ.பெரியசாமி தஞ்சாவூரிலும், சுப்புலெட்சுமி ஜெகதீசன் கரூரிலும், மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழி கடலூரிலும் பேச உள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விழுப்புரத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தென்சென்னையிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் ஈரோட்டிலும், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா திருநெல்வேலியிலும் பேச உள்ளனர்.