புதுச்சேரியில் பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முதியவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு தொண்டு நிறுவன தன்னார்வலர் ஒருவர் அண்மையில் புகார் மனு அனுப்பியிருந்தார். அதில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தியாரி காக்னர் (60) என்பவர், புதுச்சேரி கிருஷ்ணா நகரில் வசித்து வருகிறார்.
சில ஆண்டுகளாக இவர் ஒரு சிறுமியை தன்னுடன் வைத்துள்ளார். இரவு பகலாக தனது அறையில் அந்தச் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார். எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
மனுவைப் பெற்ற ஆளுநர், அதன் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டார். மேலும், புகாரை குழந்தைகள் பாதுகாப்பு குழுத் தலைவி வித்யா ராம்குமாருக்கும் அனுப்பியிருந்தார். இதையடுத்து, வித்யா ராம்குமார் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தி சிறுமியிடம் விசாரித்தனர்.
அப்போது சிறுமிக்கு அந்த முதியவர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து, லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதியவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், அவர் மீதான கைது நடவடிக்கை குறித்து அரசு, தலைமைச் செயலர், பிரான்ஸ் தூதரகம் உள்ளிட்டவற்றுக்கு தகவல் தெரிவித்த போலீஸார் காக்னரை புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், முதியவரான காக்னர், ஒடிஸா தம்பதியின் வறுமையை உணர்ந்து அவர்களுக்கு உதவி செய்வதுபோல நடித்துள்ளார். மேலும், சிறுமியின் பெற்றோரிடம் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்தும் வாங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளாக சிறுமியை அவர் தனது கட்டுப்பாட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.