தருமபுரி மாவட்டம் வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக சனிக்கிழமை முதல் தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
தருமபுரி மாவட்டம் வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களின் கோரிக்கையை ஏற்று வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக பிப்ரவரி 10-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் 30 நாள்களுக்கு 77.60 மில்லியன் கன அடி நீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்திலுள்ள 5 ஆயிரத்து 108 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். மேலும் விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.