தனுஷ்கோடி அருகே, மன்னார் வளைகுடா பகுதியில் 123 ஆமைக் குஞ்சுகள் வனத் துறையினரால் வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக கடலில் விடப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதி கரையோரம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் ஆமைகள் அதிக அளவில் முட்டையிடுவது வழக்கம். இந்த ஆண்டு தனுஷ்கோடி, கீழமுந்தல் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஆமைகள் வந்து முட்டையிட்டன. இந்த முட்டைகளை, வனத் துறையினர் சேகரித்து குஞ்சு பொறிப்பகத்தில் பாதுகாத்து வந்தனர்.
முதல்கட்டமாக வெள்ளிக்கிழமை, தனுஷ்கோடியில் முட்டையிலிருந்து வெளிவந்த 123 ஆமை குஞ்சுகளை வனத் துறையினர் மன்னார் வளைகுடா பகுதியில் பாதுகாப்பாக கடலில் விட்டனர்.
இதேபோல், கடந்த ஆண்டு ஆமைகள் முட்டையிட்டுச் சென்றதில், 19 ஆயிரம் முட்டைகள் சேகரிக்கப்பட்டு, அவற்றிலிருந்து வெளி வந்த ஆமை குஞ்சுகளில் 95 சதவீதம் கடலில் விடப்பட்டன. நிகழாண்டு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைகள் சேகரிக்கப்பட்டு, அவை பொறிப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன என வனத் துறை அதிகாரி தெரிவித்தார்.