மதுரை அருகே நான்குவழிச்சாலையில் சாலைத்தடுப்பில் மோதிய கார் எதிரே வந்த லாரி மீது மோதியதில் காரில் பயணம் செய்த மூவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
திருவாரூரைச் சேர்ந்தவர் லாரன்ஸ் (42). லாரி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்துக்கு லாரி வாங்குவதற்காக உறவினர் சேவியருடன் (49) காரில் நாகர்கோவிலுக்கு வியாழக்கிழமை இரவு புறப்பட்டுள்ளனர். காரை ரெங்சாமி ஓட்டிச்சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை-திண்டுக்கல் நான்குவழிச்சாலையில் துவரிமான் சந்திப்பில் வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தபோது கார் நிலைதடுமாறி சாலைத்தடுப்பில் மோதியது. மேலும் தூத்துக்குடியில் இருந்து சேலத்துக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லாரி மீதும் கார் மோதியது. இதில் கார் ஓட்டுநர் ரெங்கசாமி, லாரன்ஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும் பலத்த காயமடைந்த சேவியர், லாரி ஓட்டுநர் கணேசன் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சேவியர் உயிரிழந்தார். கணேசன் பலத்த காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
விபத்து குறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.