சிறுமியை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
நாமக்கல் திருச்சி சாலை ஜெய் நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, அப் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வந்த திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பெரியபட்டியைச் சேர்ந்த செந்தில் (25) என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 8 ஆம் தேதி கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை முஸ்தபா அளித்த புகாரின் பேரில், நாமக்கல் போலீஸார் செந்திலைக் கைது செய்து சிறுமியை மீட்டனர். இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட செந்திலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.