திருநெல்வேலி மாவட்டம், கடையம் வனச்சரகம் கடனாநதி அணைப் பகுதியில் தொடர்ந்து யானைகள் தோட்டங்களில் நுழைந்து அட்டகாசம் செய்ததையடுத்து, வனத் துறையினர் வியாழன் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
கடையம் வனச்சரகம், கடனாநதி அணை அடிவாரப் பகுதியான பங்களாக்குடியிருப்பு, பெத்தான்பிள்ளைக் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள தனியார் தோட்டங்களில் கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டமாக புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.
இதில், சுமார் 250-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் தேக்கு மரங்கள் நாசமாகின.
2 நாள்கள் தொடர்ந்து யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியே வந்து அட்டகாசத்தில் ஈடுபட்டதால், வனத்துறையினர் 25-க்கும் மேற்பட்டவர்கள் 3 பிரிவாக இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.