தமிழகத்தில் வனத் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளுக்கான 48 நாள் புத்துணர்வு நலவாழ்வு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை உத்தரவின்படி, தமிழகத்தில் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 22 யானைகள், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 23 யானைகள், கோவை மாவட்டம், சாடிவயல் முகாமிலுள்ள 2 யானைகள், சென்னை- அண்ணா விலங்கியல் பூங்காவில் உள்ள 4 யானைகள், குரும்பபட்டி விலங்கியல் பூங்காவில் உள்ள ஒரு யானை என மொத்தம் 52 யானைகளுக்கான 48 நாள் நலவாழ்வு முகாம், அந்த யானைகள் இருக்குமிடத்திலேயே வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.
இந்த யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் மார்ச் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முகாமுக்காக ரூ. 61 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமை வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெப்பக்காடு யானைகள் முகாமில் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து, முகாமில் பங்கேற்ற "கிருஷ்ணா' என்ற யானைக்கு சிறப்பு உணவை வழங்கினார்.
சாடிவயலில்... கோவை மாவட்டம், சாடிவயலில் கும்கி யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சாடிவயலில் வனத் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் பாரி (35), சுஜய் (45) ஆகிய இரு கும்கி யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமை கோவை மாவட்ட வன அலுவலர் சதீஷ் தொடங்கிவைத்தார்.
டாப்சிலிப்பில்... பொள்ளாச்சியை அடுத்த டாப்ஸ்லிப்பில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் வெள்ளிக்கிழமை துவங்கியது. முகாமை வால்பாறை எம்எல்ஏ கஸ்தூரி வாசு துவக்கிவைத்தார். இந்த முகாமில் டாப்சிலிப், ஆழியாறு தாற்காலிக யானைகள் முகாமில் உள்ள மொத்தம் 23 யானைகள் பங்கேற்றுள்ளன. இந்நிகழ்ச்சியில் தலைமை வனப் பாதுகாவலர் கணேசன், வனத் துறையினர் உள்பட பலர் பங்கேற்றனர்.