மறைந்த இயக்குநர் பாலசந்தரின் சொத்துகள் ஏலம் விடப்படுவதாக வெளியான செய்திக்கு அவரது கவிதாலயா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக,கவிதாலயா நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:-
கவிதாலயா நிறுவனத்தின் கடன் பாக்கிக்காக மறைந்த கே.பாலசந்தரின் வீடு மற்றும் அலுவலகம் ஏலம் விடப்படுவதாக வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கவிதாலயா நிறுவனமானது, டி.வி. தொடர் ஒன்றுக்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 2010-இல் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான வேறு சொத்துகளை அடமானம் வைத்து கடன் வாங்கியது. 2015-ஆம் ஆண்டு டி.வி. தொடர் தயாரிப்புகளை நிறுத்தி டிஜிட்டல் தயாரிப்புகளை மேற்கொள்ள முடிவு செய்தது.
முதலும் வட்டியும் சேர்த்து கணிசமான தொகையையும் செலுத்தி விட்டது. மீதமுள்ள கடன் பாக்கியைச் செலுத்துவதற்கு வங்கியுடன் சட்டரீதியான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்த சமயத்தில் வங்கியின் விளம்பரத்தைப் பார்த்து பாலசந்தரின் சொத்துகள் ஏலத்துக்கு வந்து விட்டன என செய்தி பரவி விட்டது. இது தவறான செய்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.