சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மணியம்மையின் சமூகப் பங்களிப்பு குறித்த சொற்பொழிவு நடைபெற்றது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, தமிழ்த்தாய் -70 தமிழாய்வுப் பெருவிழா கடந்த ஐன.29 - இல் சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கியது. வரும் மார்ச் 1 -ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், நூல்கள் வெளியீடு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, செவ்வாய்க்கிழமை ( பிப்.13) முற்பகல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ. விசயராகவன் தலைமையில் பெரியார் மணியம்மை அறக்கட்டளை சார்பில் 'மணியம்மையின் சமூகப் பங்களிப்பு' எனும் தலைப்பிலும், பெரியார் நாகம்மை அறக்கட்டளை சார்பில் 'திராவிட இயக்க வெளியில் பெரியாரின் பன்முக ஆளுமை' எனும் தலைப்பிலும் சொற்பொழிவுகள் நடைபெற்றன.