ரௌடி பினு விவகாரத்தில் சரணடைந்த லாரி ஷெட் உரிமையாளர் வேலுவை நீதிமன்ற காவலில் வைக்க ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அருகே வடக்கு மலையம்பாக்கம் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் வேலு என்பவருக்குச் சொந்தமான வாகன பழுது நீக்கும் இடத்தில் சென்னையைச் சேர்ந்த சுமார் 100 ரௌடிகள், சூளைமேட்டைச் சேர்ந்த ரௌடி பினுவின் பிறந்த நாளை கடந்த 6-ஆம் தேதி கொண்டாடினர்.
100-க்கும் மேற்பட்ட ரௌடிகள் பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பது குறித்த தகவலை அறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று அவர்களில் 75 பேரை பிடித்தனர்.
அப்போது ரௌடிகள் பினு, அவரது கூட்டாளிகள் கனகு என்ற கனகராஜ்,விக்கி என்ற விக்னேஷ் உள்ளிட்ட சிலர் தப்பியோடினர். இது தொடர்பாக மாங்காடு போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.
ரௌடி பினு நேற்று போலீஸில் சரணடைந்த நிலையில் லாரி ஷெட் உரிமையாளர் வேலு, தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். அப்போது வேலுவை பிப்ரவரி 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படத்தவும் ஆணை பிறப்பித்தார்.