சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் வரும் 28-ஆம் தேதி மீண்டும் ஆஜராக விசாரணை ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள்,
முன்னாள் தலைமைச் செயலாளர்கள், சசிகலாவின் உறவினர்கள் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் அண்மையில் சமர்ப்பித்தது. மேலும், எம்எல்ஏ தினகரன், அவரது ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோரும் ஜெயலலிதா
சிகிச்சை தொடர்பாக தங்களிடம் இருந்த விடியோ ஆதரங்களை சமர்ப்பித்துள்ளனர்.
விவேக் ஜெயராமன் ஆஜர்: இந்நிலையில், சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனுக்கு விசாரணை ஆணையம் அண்மையில் அழைப்பாணை அனுப்பி இருந்தது. அதன்படி, செவ்வாய்க்கிழமை ஆஜரான விவேக் ஜெயராமனிடம் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 வரை விசாரணை நடைபெற்றது. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா மரணம் குறித்து கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தேன். மீண்டும் வரும் 28-ஆம் தேதி ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்றார்.