தமிழக காவல்துறையில் பணிபுரியும் 12 காவல் கண்காணிப்பாளர்களை (எஸ்.பி.) டி.ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு வழங்குவதற்கு மத்திய உள்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தமிழக காவல்துறையில் கடந்த 2004-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் டி.ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு பெறுவதற்கு தகுதி அடைந்துவிட்ட நிலையில், அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தாமதம் ஏற்பட்டு வந்தது. இருப்பினும், டிஐஜி பதவி உயர்வுக்கான தகுதிப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.
இதன் அடுத்தகட்டமாக பணிமூப்பு அடிப்படையில் 12 காவல் கண்காணிப்பாளர்களை டிஐஜி.களாக பதவி உயர்வு வழங்குவதற்குரிய அனுமதியை மத்திய உள்துறை சில தினங்களுக்கு முன்பு வழங்கியது.
இதன்படி, இப்போது காவல் கண்காணிப்பாளர்களாக இருக்கும் கே.ஏ.செந்தில்வேலன், அவினாஷ்குமார், அஸ்ராகர்க், ஏ.ஜி.பாபு, பி.கே.செந்தில்குமாரி, ஏ.டி.துரைகுமார், சி.மகேஷ்வரி, ஆசியம்மாள், ஏ.ராதிகா, ஆர். லலிதாலட்சுமி, எம்.வி.ஜெயகௌரி, என்.காமினி ஆகியோர் டிஐஜி பதவி உயர்வு பெறுவதற்கு மத்திய உள்துறையின் அனுமதி கிடைத்துள்ளது. இதன் விளைவாக ஓரிரு நாள்களில் இவர்கள் முறைப்படி டிஐஜி.யாக பதவி உயர்த்தப்பட்டு, புதிய பணியிடங்களில் நியமிக்கப்படுவர் என கூறப்படுகிறது.