போக்குவரத்து விதிகளை மீறிய 1.87 லட்சம் பேரின் ஓட்டுநர் உரிமங்கள் கடந்த ஓராண்டில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மாநில சாலை பாதுகாப்பு குழுக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை (பிப்.13) நடைபெற்றது. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், காவல்துறை டிஜிபி தே.க.ராஜேந்திரன் உள்பட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இது தொடர்பாக சாலை பாதுகாப்பு ஆணையரகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த ஆண்டில் 5 ஆயிரத்து 869 சாலை விபத்துகளும், 1,061 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இது 2016-ஆம் ஆண்டைவிட குறைந்துள்ளது. இதற்காக சாலைப் பாதுகாப்புக் குழு காவல்துறையினரின் செயல்பாட்டைப் பாராட்டியது.
கடந்த ஆண்டில் மட்டும் அதிவேகம், அதிக பாரம், சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்லுதல், சிவப்பு விளக்கைத் தாண்டுதல், குடிபோதையில் வாகனத்தை இயக்குதல், வாகனம் ஓட்டும்போது செல்லிடப் பேசியை உபயோகித்தல் போன்ற விதிமீறல்களுக்காக 1 லட்சத்து 87 ஆயிரத்து 213 ஓட்டுநரின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.