சென்னை: ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆணையத்திடம் ஒரு பென்-டிரைவைக் கொடுத்ததாகவும், அதில் 24 விடியோக்கள் உள்ளதாகவும் சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.
சென்னை கலசமகாலில் அமைந்துள்ள விசாரணை ஆணையத்தில் இன்று காலை சசிகலாவின் உதவியாளராக இருந்த கார்த்திகேயன் ஆஜரானார். சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிந்து வெளியே வந்த கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், விசாரணை ஆணையத்தில் ஒரு பென்-டிரைவ் கொடுத்துள்ளேன். அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சையின் போது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியவர்களைப் பற்றிய 24 விடியோக்கள் உள்ளன.
விடியோவில் இருப்போரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் அந்த பென்-டிரைவ் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
போயஸ் கார்டனில் எடுக்கப்பட்ட விடியோ அதில் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இல்லை. ஜெயலலிதா சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது சர்ச்சைக்குரிய கருத்துகளை பலர் கூறினர். அந்த வகையில் பலர் தெரிவித்த கருத்துகள் யூடியூப்பில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு பென்-டிரைவில் சேமித்து வழங்கியுள்ளேன். அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன் என்றார்.