சேலம் மாவட்டம் ஆனைமடுவு நீர்த் தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக வியாழக்கிழமை (பிப்.15) முதல் நீர் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சேலம் மாவட்டம் புழுதிக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆனைமடுவு நீர்த்தேக்கத்திலிருந்து ஆற்றுப் பாசனம் மற்றும் கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆனைமடுவு நீர்த்தேக்கத்திலிருந்து அணையின் தலைமை மதகின் மூலம் ஆற்றுப் பாசனப் பகுதிகளுக்கு வியாழக்கிழமை (பிப்.15) காலை 8 மணி முதல் வரும் 21-ஆம் தேதி காலை 8 மணி வரை, ஒரு நாளைக்கு விநாடிக்கு 60 கனஅடி வீதம் 6 நாள்களுக்கு 31.08 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நீர் திறக்கப்படும்.
வரும் 21-ஆம் தேதி காலை 8 மணி முதல் அணையின் தலைமை மதகின் மூலம் வலதுபுறக் கால்வாய் பகுதிக்கு நாள்தோறும் விநாடிக்கு 35 கனஅடி வீதம், இடதுபுறக் கால்வாய் பகுதிக்கு நாள்தோறும் விநாடிக்கு 15 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படும். கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு தினசரி விநாடிக்கு 50 கனஅடி வீதம் 6 நாள்களுக்கு சுழற்சி முறையில் 25.92 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் சிறப்பு நனைப்புக்காக தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.