கூண்டில் சிக்கிய சிறுத்தை

கோவை மாவட்டம், வால்பாறை அருகே 4 வயது சிறுவனைக் கடித்துக் கொன்ற சிறுத்தை, வனத் துறையினர் வைத்த கூண்டில் புதன்கிழமை சிக்கியது.

கோவை மாவட்டம், வால்பாறை அருகே 4 வயது சிறுவனைக் கடித்துக் கொன்ற சிறுத்தை, வனத் துறையினர் வைத்த கூண்டில் புதன்கிழமை சிக்கியது.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எஸ்டேட் பகுதிகளில் மட்டும் காணப்பட்ட இவை, தற்போது வால்பாறை நகர் பகுதிக்குள்ளும் இரவு நேரத்தில் நுழைந்து நாய்களைப் பிடித்துச் செல்கின்றன. 
இந்நிலையில், வால்பாறையை அடுத்த நடுமலை எஸ்டேட் வடக்கு டிவிஷனில் வசிக்கும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த முஷாரப் அலி என்ற தொழிலாளியின் குடியிருப்புக்குள் கடந்த 8-ஆம் தேதி புகுந்த சிறுத்தை, அவரது 4 வயது மகன் சைதுலை அவனது தாய் கண் முன்னே கவ்வித் தூக்கிச் சென்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் தேடுதலுக்குப் பின் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சிறுவனின் தலை, உடல் பாகம் தனித்தனியாக கண்டுபிடிக்கப்பட்டது. 
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிறுத்தையைப் பிடிக்க வலியுறுத்தி வால்பாறையில் சாலை மறியல், கடையடைப்பு போராட்டங்கள் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இதனையடுத்து சிறுத்தை வந்து சென்ற குடியிருப்பு அருகிலேயே வெள்ளிக்கிழமை இரவே கூண்டு வைத்தும், கண்காணிப்பு கேமரா பொருத்தியும் வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நாய் குரைக்கும் சப்தத்தைக் கேட்டு அப்பகுதிக்கு வந்த சிறுத்தை நாயைப் பிடிக்க முயன்றபோது கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டது. 
இதனைக் கண்ட வனத் துறையினர் விரைந்து சென்று கூண்டின் மறுபகுதியில் இருந்த நாயை மீட்டனர். பின்பு அங்கு வந்த வால்பாறை வனச் சரக அலுவலர் சக்திவேல் தலைமையிலான வனத் துறையினர் சிறுத்தையை லாரி மூலம் கொண்டு செல்லும் நடவடிக்கையை மேற்கொண்டனர். பிடிபட்ட சிறுத்தையை டாப்சிலிப் பகுதியில் உள்ள வரலியாறு வனப் பகுதியில் கொண்டுபோய் விட்டதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com