சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றது தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானது என்று அரசு மருத்துவர் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முன்பு, அரசு மருத்துவர் பாலாஜி நேற்று 3வது முறையாக நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத் துறை செயலர் கூறியதால்தான், ஜெயலலிதாவிடம் மருத்துவர் பாலாஜி கையெழுத்துப் பெற்றதாக ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளியாகின.
இது குறித்து இன்று அவர் விளக்கம் அளித்தார். அதாவது, சுகாதாரத் துறை அமைச்சரோ, அந்த துறை செயலரோ வாய்மொழியாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் வேட்பாளருக்கான அறிக்கையில், சுகாதாரத் துறை செயலர் கூறியதால் நான் கையெழுத்துப் பெற்றேன் என்று கூறுவதில் உண்மையில்லை. என்னுடைய அதிகார வரம்புக்கு உட்பட்டே ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றேன் என்று கூறியுள்ளார்.