அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் இயக்கம் (ஏபிவிபி) சார்பில் கல்வி குறித்த மாநில மாநாடு சென்னை வியாசர்பாடியில் சனிக்கிழமை (பிப்.17) தொடங்கவுள்ளது. இந்த மாநாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவுள்ளார்.
இது தொடர்பாக ஏபிவிபி சென்னை மாநகர செயலாளர் கோகுலகிருஷ்ணன் நிருபர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் இயக்கத்தின் இரண்டாவது மாநாடு வரும் 17, 18 ஆகிய இரு நாள்களில் சென்னை வியாசர்பாடியில் உள்ள மகாகவி பாரதியார் நகரில் உள்ள விவேகானந்தா பள்ளியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழகத்திலிருந்து மாணவ தலைவர்கள் பங்குபெறவுள்ளனர். சிறப்பு அழைப்பாளராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்கிறார்.
இந்த மாநாட்டில் தமிழகத்தில் நிலவும் கல்வி ரீதியான பிரச்னைகள், உயர்கல்வி, சமுதாய விழிப்புணர்வு சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. இதில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கலந்துகொண்டு பேசவுள்ளனர். மேலும் மாநாட்டையொட்டி பொதுக்கூட்டம், பேரணி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என்றார்.