செவிலியர் தற்கொலை விவகாரம் தொடர்பாக வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் 2 பேர் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நரிமேட்டைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் மணிமாலா (26). இவர், வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை இரவு தான் தங்கியிருந்த சுகாதார நிலையக் குடியிருப்பில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய தற்கொலைக்கு சுகாதார நிலைய தலைமை மருத்துவர் தமயந்தி, மருத்துவர் சக்திஅகிலாண்டேஸ்வரி இருவரும் கொடுத்த நெருக்கடிதான் காரணம் என்றுகூறி, அவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர், உறவினர்கள், செவிலியர் சங்கம், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு மணிமாலா சடலம் வைக்கப்பட்டிருந்த காங்கயம் அரசு மருத்துவமனையில் மூன்று நாள்களாகத் தொடர் போராட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இரண்டு மருத்துவர்கள் மற்றும் மணிமாலாவுடன் பணிபுரிந்த செவிலியர் விஜயசெல்வி, ஜெயபிரபா ஆகியோரிடம் காவல் துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் இருவரும் சித்தோடு மற்றும் நாமக்கல்லுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அரசு நிவாரணத் தொகை, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை, வருவாய் வட்டாட்சியர் விசாரணை நடத்த உறுதிஅளிக்கப்பட்டதன் பேரில், போராட்டம் முடிந்து மணிமாலா சடலம் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.