டிடிவி தினகரன் பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் என்.ஜி.பார்த்திபன் தாக்கல் செய்த மனுவில், 'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24-ஆம் தேதி வேலூரில் உள்ள ஸ்ரீகிருபா வர்த்தக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தோம். இந்தக் கூட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்று உரையாற்றுகிறார். எனவே இந்த பொதுக்கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி கேட்டு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வடக்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு கடந்த 6-ஆம் தேதி கடிதம் கொடுத்தோம். காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்து விட்டனர். எனவே பொதுக் கூட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் புதன்கிழமை விசாரணக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.